Related Posts with Thumbnails

திங்கள், 23 செப்டம்பர், 2019

பத்தி எழுத்து



சுதந்திர நாட்டின் அடிமைகள்.

நாச்சியாதீவு பர்வீன்.



இன்னொரு இனமுறுகலுக்கான உச்ச கட்ட முஸ்தீபுகளை ஞானசார மேற்கொண்டு வருகிறார். பேரினவாத சக்திகளின் அடக்கி ஆளுகின்ற மனோபாவத்தின் விளைவே இது. தமிழர்களையும், முஸ்லிம்களையும் அல்லது தமிழ் பேசுகின்ற சமூகத்தை நசுக்கி ஒரு அடிமைச்சமூகமாக வைத்துக்கொள்ள முனைகின்ற ஒரு போக்கு தொடர்ச்சியாக உணரப்பட்டு வருகின்றது.

தமிழின் தொன்மைக்கு முன்னால் சிங்களம் அழிந்து போய்விடும் என்ற மனப்பயத்தில் சிங்கள மொழிபேசுகின்ற சமூகத்தை ஒரு இருண்மைக்குள் வைத்துக்கொள்ள முனைகின்றது பேரினவாத சக்திகள்.

பௌத்த மதத்தின் நேர்மையான உபதேசங்களை மறந்து குரோதத்தையும், முரண்பாடுகளையும் தோற்றுவிப்பதில் ஞானசார, அத்துரலியத்த போன்ற பௌத்த தேரர்கள் முன்னின்று செயற்படுகின்றனர். அவர்களை பொருத்தமட்டில் தமிழ் பேசுகின்ற சமூகத்தை அடக்கி ஆள வேண்டும். இந்த  மனோநிலையை அப்பாவி சிங்கள மக்களின் மத்தியில் விதைத்து  வருகின்றார்கள்.

இந்த நிலை மீண்டும் ஒரு கொடூர யுத்தத்தை நோக்கி தமிழ் பேசும் சமூத்தை தள்ளிவிடுமோ என்கின்ற அச்சத்தை தோற்றுவித்துள்ளது.

அகிம்சையும், சமாதானமும் விட்டுக்கொடுப்பும் வெறுமனே மத அநுஸ்டானங்களில் மாத்திரம் பேசப்படுகின்ற போதனையாக மாறிவிட்டதை அவதானிக்க முடிகிறது. இந்தநிலை தொடர்வது ஆரோக்கியமானதல்ல.

சட்டமும் நீதியும் பொதுவானதாகவும், பக்கச்சார்பற்றதாகவும் இருக்கவேண்டும். மதநல்லிணக்கத்தை காவுகொள்கின்ற முல்லைதீவு நீராவியடி பிள்ளையார் கோவில்  முன்றலில் தேரரின் பூதவுடல் தகமானது நீதித்துறைக்கே விடுக்கப்பட்ட சவாலாகும். ஞானசார போன்ற கடும் போக்கு மனோநிலையுடைய பௌத்த தேரர்களிடம் அன்பையும், கருணையையும், அகிம்சையையும் எதிர்பார்க்க முடியாது.
நாம் அவர்களுக்கு அதனை ஊட்டவும் முடியாது.

இந்த அழகிய தேசத்தை இவ்வாறான ம(ன)த நோயாளர்களிடமிருந்து காப்பாற்றும் மாற்று சக்தியின் அடையாளம் இன்னும் தென்படவில்லை. அரசியல்வாதிகளின் சீறற்ற நகர்வுகள், கதிரைக்கான போட்டிகள் இனவாத பேய்களை ஒருபோதும் விரட்டப்போவதில்லை. கோட்டா, சஜித், அநுர இவர்களின் பெயர்களும் உருவங்களும் மாத்திரமே வித்தியாசம். மனோநிலை ஓரளவு ஒன்றாகவே காணப்படுகின்றன.

நமது அடுத்த பரம்ரையும் இந்த நாட்டில் நிம்மதியற்ற கொதிநிலை வாழ்க்கையைத்தான்  அநுபவிக்கப்போகுகிறது என்பது கசப்பான உண்மையாகும். தமிழ் பேசும் ஒரு இனத்தின் ஒற்றுமை தமிழ்- முஸ்லிம் உறவின் வலுவான கட்டமைப்பு என்பன சிங்கள அரசிடம் தனித்துவமான பேரம் பேசலுக்கான சாளரத்தை சிறுபான்மை சமூகத்திற்க்கு திறந்துவிட வாய்ப்புள்ளது.

அதுவரைக்கும் நாம் சுதந்திர நாட்டின் அடிமைகள் தான்.

Read more...

செவ்வாய், 17 செப்டம்பர், 2019

கட்டுரை


சகல தரப்புக்களையும் ஒன்றிணைத்து பலம்வாய்ந்த இயக்கமாக இதனை புடம்போட புறப்படுங்கள்.

(மர்ஹூம் அஷ்ரபின் 19வது நினைவு தின நிகழ்வில் அமைச்சர் ஹக்கீமின் உரை )

                        நாச்சியாதீவு பர்வீன்.


(ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் ஸ்தாபக தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரபின் 19 வது நினைவேந்தல் நிகழ்வுகள் கடந்த திங்கட்கிழமை (16) குருநாகல்,சியம்பலாகஸ்கொட்டுவ "ரிச்வின்" வரவேற்பு மண்டபத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீமின் தலைமையில் இடம்பெற்றது. இந்த நிகழ்வின் சிறப்பு பேச்சாளராக அஷ்ஷெய்க் ரவூப் செய்ன் அழைக்கப்பட்டிருந்தார். இந்தியாவிலிருந்து வருகை தந்திருந்த காயல் மஹ்பூப் குழுவினர் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்களும் பெரும்திரளான கட்சி ஆதரவாளர்களும் இந்தநிகழ்வில் கலந்து கொண்டனர். நிகழ்வுகளை குருநாகல் மாவட்டத்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அமைப்பாளரும், முன்னைய நாள் வடமேல் மாகாண சபை உறுப்பினருமான சட்டத்தரணி ரிஸ்வி ஜவஹர்ஷா மற்றும் குருநாகல் மாவட்டத்து முஸ்லிம் காங்கிரசின் குருநாகல் மாவட்ட மத்திய குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர். மர்ஹூம் அஷ்ரபின் கவிதைகளை சிரேஷ்ட கலைஞர்களான கலைக்கமல் மற்றும் அமீர்கான் ஆகியோர் பாடல்வடிவில் நிகழ்வின் இடையிலே தந்தனர் )

மறைந்த எமது பெருந்தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களின் இழப்பினை வருடாவருடம் நாம் நினைவு கூறுவது என்பது அவரது சகவாசத்தை கொண்டாடுகின்ற ஒரு நிகழ்வாகத்தான் தொடர்ந்தும் இருந்து வந்திருக்கிறது.

என்றும் எங்களோடு உடனிருக்கின்ற ஒருவராகத்தான் அவரை நாங்கள் எல்லோரும் பார்க்கிறோம்.மறைந்தும் மறையாத இந்த நாட்டு முஸ்லிம்களின் தனிப்பெரும் தானைத்தளபதியாக அடையாளப்படுத்துகிற மிகப்பெரிய ஆளுமையாக அவரை என்றென்றும் நாங்கள் நிலைநிறுத்தி நினைத்து கொண்டாடுகிறோம்.அந்த கொண்டாட்டத்தின் ஒரு அம்சமாகத்தான் அவர் எங்களை விட்டு பிரிந்த அகோர நிகழ்வின் பின்னணியிலேயே 19 வருடங்கள் உருண்டோடிவிட்டன. இந்த 19 வருடங்களுக்குள் இந்த நாட்டின் அரசியல் பலவிதமான புதிய பரிணாமங்களை அடைந்திருக்கிறது.

                  சட்டத்தரணி ரிஸ்வி ஜவஹர்ஷா

இந்த கால எல்லையில் முஸ்லிம் சமூகம் அவ்வப்போது நிறைய சவால்களை எதிர்கொண்டிருக்கிறது. இந்த ஒவ்வொரு கட்டத்திலும் எங்களுடைய பெருந்தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களுடைய வழிகாட்டல் அவருடைய வாழ்வில் பல சந்தர்ப்பங்களில் எதிர்கொண்ட சவால்கள் என்பன எப்போதெல்லாம் நாங்கள் நெருக்குவாரங்களை எதிர்நோக்குகின்ற பொழுதுகளில் எங்கள் கண்முன்னே வந்து நிழலாடுகின்ற விஷயங்களாகும் என்று சொன்னால் அது மிகையாகாது.

தலைவருடைய குணவியல்புகளை அவருடைய நினைவேந்தல் நிகழ்ச்சியிலே இரைமீட்டி பார்ப்பதென்பது மாமூலாக எல்லோரும் செய்கின்ற மரியாதையாக இருந்துவிட்டு போகும் என்பதற்காக நாங்கள் அதனை செய்யவில்லை. எந்த சந்தர்ப்பத்திலும் அவருடைய அரசியலை உரசிப்பார்க்கின்ற போது என்னென்ன சந்தர்ப்பங்களிலே அவரை நாங்கள் நினைவு கூறுகிறோம், அவ்வாறான சந்தர்ப்பங்களில் அவர் இருந்திருந்தால் எவ்வாறு எதிர் கொண்டிருப்பார் என்று அதனோடு ஒத்துப்பார்க்கின்ற ஒரு விஷயமாகத்தான் நாங்கள் அவருடைய, வாழ்க்கையை எங்களோடு இரண்டற கலந்த ஒன்றாக வடிவமைத்துக் கொண்டிருக்கிறோம்.


கடந்த வருடம் சம்மாந்துறையிலே நாங்கள் தலைவருடைய இந்த நினைவு நாளை கொண்டாடிய போது அடுத்து வருகின்ற வருஷத்திலே என்னென்ன சவால்களை எதிர்கொள்வோம் என்று யாரும் ஆரூடம் கூறக்கூடிய நிலையிலே நாங்கள் இருக்கவில்லை. நினைவு நாளை கொண்டாடி ஒருமாதம் கழிந்தவுடனேயே இந்த நாட்டிலே மிகப்பெரியதொரு அரசியல் பிரளயம் தலையெடுத்தது. பெரியதொரு அரசியல் சதி அரங்கேறியதை நாங்கள் எல்லோரும் பார்த்தோம். அதிலே முஸ்லிம் சமூகத்தின் அரசியல் பிரதிநிதிகளை வெறும் பகடைக்காயாக பாவித்து இந்த சதுரங்க விளையாட்டில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களை காவு கொண்டு மிகப்பெரியதொரு அரசியல் சதியை அரங்கேற்றிவிடலாம் என்று எண்ணிக்கொண்டிருந்த சக்திகள, முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் 12 பேர் எடுத்த முடிவினால் தடுமாறிப்போனார்கள். அதுவும் மறைந்த எங்கள் தலைவரின் பாசறையிலே கற்ற விடயங்கள்தான்.

சவால் என்று வருகின்ற போது உம்ராவுக்கு சென்று, கஹ்பத்துல்லாஹ்வை தரிசிக்கின்றமை அவரது வழமை. அவற்றைத்தான் நாங்கள் பின்பற்றுகிறோம். அனைவரையும் கப்பலேற்றி கொண்டு போகின்ற அந்த நிகழ்வு தலைவர் அவர்கள் மறைந்த அந்த வருஷம் எல்லோருக்கும் ஞாபகம் இருக்கும் அவருடைய அந்த உம்ரா பயணம்.தன்னுடைய இஹ்ராம் துணியை கலையாமல் ஒன்பது நாட்கள் தொடர்ச்சியாக, இந்த நாட்டில் அடுத்த கட்டமாக வரப்போகின்ற தேர்தலை எவ்வாறு முகம் கொடுப்பது அதற்கான தயார் படுத்தல்களை செய்வதற்காக பக்கம்பக்கமாக அவர் ஆவணங்கள் தயாரித்துக்கொண்டிருந்தார். ஜித்தாவிலே இருந்து கொண்டு தன்னுடைய உம்ரா கடமையை முடிப்பதற்கு முன்பு தன்னுடைய சமூகம் சார்ந்த அரசியலை சாதுரியமாக கையாள்வதற்கு எதையெல்லாம் செய்யலாம் திட்டம் போட்டுக்கொண்டு செயற்பட்டார்.

எனக்கு இன்று போல ஞாபகம் இருக்கிறது நள்ளிரவு 10.30 மணிக்கு தலைவரிடமிருந்து எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. சுமார் 40 நிமிடங்கள் அவர் என்னோடு பேசினார்.தொலைபேசி அழைப்பினுடைய நோக்கம் அன்று முஸ்லிம் காங்கிரஸுடைய பொதுச்செயலாளர் பொறுப்பிலே இருந்த எனக்கு முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் மரச்சின்னத்தை தான் அமைத்திருந்த தேசிய ஐக்கிய முன்னணி (நுஆ) கட்சிக்கு நாங்கள் சின்னத்தை மாற்றியெடுப்போம். சின்னத்தை மாற்றுவதற்கு தேர்தல்கள் சட்டத்தின் பிரகாரம் கட்சியின் செயலாளர் நான் தேர்தல் ஆணையாளருக்கு நான் கடிதம் எழுத வேண்டும். ஒரு பாராளுமன்ற தேர்தல் அறிவித்ததன் பின்னால் இரண்டு கட்சிகள் தாம் விரும்பினால் தமது சின்னங்களை மாற்றிக்கொள்ள முடியும் என்ற சரத்தினை மிக நுணுக்கமாக தேடிப்பிடித்து, முஸ்லிம் காங்கிரசை விடுத்து நாங்கள் ஒரு புதிய பொதுவான அரசியலுக்காக தயாராக வேண்டும் என்ற நோக்கிலே அதை மாற்றி எடுப்பதற்காக இது சரியா பிழையா என்பதற்கான அந்த விஷயத்தில் என்னை திருப்திப்படுத்துவதற்காகவே இது விவகாரமாக பேசினார்.

ஈற்றிலே உம்ரா முடித்து வந்தவுடனேயே எல்லோருக்கும் ஞாபகம் இருக்கும் அன்றைய ட்ரான்ஸ் ஏசியா ஹோட்டலில் மு.காவின் பேராளர் மாநாடு, விகாரமகாதேவி பூங்காவிலே  நுஆ கட்சியின் இன்னொரு பேராளர் மாநாடு. அவர் என்ன செய்யப்போகிறார் என்று யாருக்கும் தெரிந்திருக்கவில்லை இரு கட்சிகளிலுமிருந்து செயலாளர்கள் பதவி விலகினோம். தலைவரின் இந்த முடிவுகள் பற்றி அவர் யாரிடமும் சொல்லவில்லை. இராஜினாமா கடிதத்தை வாங்கினார் வாங்கி அவர் செய்த அடுத்த வேலை முஸ்லிம் காங்கிரஸ் பொதுச்சயலாளர் பதவியிலிருந்து நான் பதவியிறக்கப்பட்டு , மு காவின் செயலாளர் பதவிக்கு இந்த குருநாகல் மாவட்டத்திலிருந்து கட்சியின் மூத்த போராளியான டாக்டர் ஹப்ரத் நியமிக்கப்படுகிறார். எனக்கும் ஒரு கௌரவ பதவி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசிலே தரப்படுகின்றது. பிரதி தவிசாளர் என்று நினைக்கிறேன்.

எல்லோரும் ஆச்சிரியத்துடன் பார்த்தார்கள் முஸ்லிம் காங்கிரசின் தலைவரிடத்தில் செயலாளர் நம்பிக்கை இழந்து விட்டாரோ,திடிரென்று அவரது பதவி பறிக்கப்பட்டுவிட்டதென்று. கட்சி தலைமைக்கு விசுவாசமாக இருக்கவேண்டிய ஒரு பதவியாகிய செயலாளர் பதவியிலிருந்து ரவூப் ஹக்கீம் அகற்றப்பட்டார் என்ற விஷயம் எல்லோருக்கும் ஒரு அதிர்ச்சி வைத்தியம் போல இருந்தது. யாரும் பேசவில்லை தலைவர் சொன்னால் எதையும்  திருப்பிக்கேட்காமல் இருக்கின்ற போராளிகள் என்ற வகையிலே நாங்கள் இருந்தோம். விகாரமகாதேவி பூங்காவிலே தான் ரகசியம் என்னவென்று தெரிந்தது அங்கு பிரகடனப்படுத்தப்படுகிறது தேசிய ஐக்கிய முன்னணியின் (நுஆ) செயலாளராக முன்னர் நண்பர் ஹிஸ்புல்லாஹ் இருந்த இடத்திற்கு நான் நியமிக்கப்படுகிறேன். ஏனென்றால் தேசிய ஐக்கிய முன்னணிதான் தேர்தலில் களமிறங்கப்போகிறது அதிலேதான் நாங்கள் தேர்தல் கேற்கப்போகிறோம். மரச்சின்னம் அதற்கு மாற்றி எடுக்கப்படுகிறது.

தேசிய ஐக்கிய முன்னணியும், பொதுஜன ஐக்கிய முன்னணியும் அன்று தேர்தல் ஒப்பந்தம் செய்து  தலைவர் அவர்கள் அம்பாறை மாவட்டத்திலே பொதுஜன ஐக்கிய முன்னணியின் கதிரச்சின்னத்திலே கேட்பதற்கான ஏற்பாடு, தொப்பி மொஹிதீன்,அதாவுல்லா உட்பட ஏனைய உறுப்பினர்கள் மூன்று முஸ்லிம் உறுப்பினர்கள் கேட்பது. அதிலே கேட்பதற்காக விமல வீர திஸாநாயக்கவும், தேசிய பட்டியலுக்காக தெவரப்பெருமவும் போடப்படுகின்றார்கள். இப்படியெல்லாம் செய்யப்பட்டமை தலைவருடைய எதிர்பார்ப்பு மிகத்தெளிவாக சொன்னார் நிச்சியமாக எங்களுக்கு 11 ஆசனங்கள் வரும் என்று கணக்குப்போட்டு சொன்னார். தேர்தல் முடிவுகள் வந்தபோது தலைவர் எங்களோடு இருக்கவில்லை. அந்த கோரவிபத்தில் அவரை நாங்கள் இழந்தோம் . அல்ஹம்துலில்லாஹ்   அவர் சொன்ன வாக்கு அப்படியே பலித்தது.

அவர் சொன்னது போலவே 11 ஆசனங்களை நாங்கள் வென்றெடுத்தோம். ஏழு ஆசனங்கள் பொது முன்னணியுடன் கூட்டாக பெற்றோம்.நான்கு ஆசனங்களை நாங்கள் நுஆ கட்சியிலே வென்றெடுத்தோம். அந்த நான்கில் ஒரு ஆசனத்திற்குரியவனாக நான் பாராளுமன்றத்திற்கு மரச்சின்னத்திலே கண்டி மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்டேன். எனக்கு இன்னும் ஞாபகமிருக்கிறது வேட்பாளர்களுக்கான அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு வெகு விமர்சையாக தாருஸ்ஸலாத்தில் நடைபெற்றபோது அதிலே என்னை ஆரத்தழுவி வடகிழக்கு வெளியிலே நீ எனது கட்சியின் முதலாவது தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினராக வருவாய் என்று சொன்னார். அத்தோடு இன்னொரு விடயத்தையும் சொன்னார் நீங்கள் என்னுடைய சபாநாயகராகவும் இருப்பீர்கள் என்றும் சொன்னார்.

அவர் அப்படி திட்டம் வைத்திருந்தார். அடுத்த பாராளுமன்றத்திலே பேரம் பேசுகின்ற ஒரு நிலையிக்கு தன்னுடைய கட்சியை கொண்டு வரவேண்டும். அதன்மூலம் சபாநாயகர் பதவியையும் நாங்கள் அடைய வேண்டும். என்பது அவரது மறைவுக்குப்பின்னால் பலருக்கு சொன்ன விடயங்களிலிருந்து நாங்கள் அறிந்து கொண்டோம். உண்மையில் எங்களது 11 ஆசனங்கள்தான் ஆட்சியை தீர்மானிக்கின்ற சக்தியாக இருந்தது.எங்களுடைய ஆசனங்கள் இல்லை என்றால் சந்திரிகா அம்மையார் ஆட்சி அமைத்திருக்க முடியாது. அந்த நிலைமையை கொண்டு வருவதற்காக அவர் தன்னுடைய இஹ்ராம் துணியை கலையாமல் செய்த அந்த அரசியல் சாகசங்களை இப்போது இரைமீட்டிப்பார்க்கிறோம்.

என்ன சவால் வந்தாலும் தலைவர் என்ன செய்திருப்பார், எப்படி நடந்திருப்பார் என்றெல்லாம் எண்ணிப்பார்க்கின்ற போது, ஒரு தேர்தல் காலத்திலே அவர் செய்கிற இந்த அசகாய சாமர்த்தியமான அரசியல் நகர்வுகள் என்கிற விஷயத்தில் அவருக்கு நிகர் அவர்தான்.

இன்று எல்லோரும் தடுமாறிப்போயிருக்கிறார்கள். நாடு முழுக்க ஒரு ஜனாதிபதி தேர்தலுக்கு முகம் கொடுப்பதற்கு பார்த்துக்கொண்டு இருக்கிறோம். அரசாங்கத்திலே இருக்கின்ற பங்காளிக்கட்சிகள் எல்லாம் அரசாங்கத்தின் பிரதான கட்சி என்ன முடிவு எடுக்கும் என்பதிலே எல்லோரும் அடிக்கடி சந்தித்து பேசிக்கொள்கிறோம். கள யதார்த்தங்களில் ஏதோ இருக்கத்தக்கதாக தலைமைகள் வேறு ஏதோ சிந்தனைகளில் இருப்பதைப்போல எங்களுக்கு தெரிகிறது. ஆனால் இந்த கள யதார்தங்களைப்பற்றிய எந்த புரிதலுமில்லாமல் குடும்பிச்சண்டை நடந்து கொண்டிருக்கிறது.

1988 ஆம் ஆண்டுகளில் ஜனாதிபதி தேர்தல் என்னுடைய நினைவுக்கு வருகிறது. எங்களது கட்சி சந்தித்த முதலாவது ஜனாதிபதி தேர்தல் இந்த நாட்டின் அரசியலையே தலைகீழாக புரட்டிப்போட்ட ஒரு தேர்தல் என்றுகூட சொல்லலாம். ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் ஆறில் ஐந்து பெரும்பான்மையோடு 77 ஆம் ஆண்டு தொடக்கம் 89 ஆம் ஆண்டு வரை ஒரு சர்வஜன வாக்கெடுப்பை மக்கள் மீது திணித்து ஸ்ரீமாவோ பண்டார நாயக்கவினது குடியுரிமையை பறித்து, மிகப்பெரிய ஜனநாயக விரோத நடவடிக்கையின் மூலம் ஒரு ஆட்சி நீடிப்பை பெற்று ஈற்றிலே வடக்கிலும் யுத்தம், தெற்கிலும் யுத்தம் இருபுறத்திலும் மிகப்பெரிய அரசியல் நெருக்கடிகள் மூண்டிருக்கின்ற நிலையில் அந்தக்கட்டத்திலே எங்களுக்கு என்ன நடந்தது என்று நான் நினைத்துப்பார்க்கிறேன்.

ஜே.ஆர்.ஜெயவர்தன வின் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்பதற்காக பெரிய எதிர்க்கட்சி கூட்டணி "ஜனநாயக மக்கள் கூட்டணி" என்ற பெயரில்  உருவாகிசெயற்பட்டது. அதிலே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எனும் புரட்சிகரமான அரசியல் இயக்கம் இணைந்திருந்தது. இந்திய இலங்கை ஒப்பந்தத்தில் அதிருப்தி அடைந்த முஸ்லிம்கள் தங்களுடைய அடையாள அரசியலை நிலைநிறுத்துவதற்காக ஆரம்பித்த போராட்டம், நடந்து முடிந்த மாகாண சபை தேர்தல்களிலே எங்களுக்கு புதியதொரு அரசியல் அறிமுகத்தை நாடு முழுவதிலும் உருவாக்கி தந்திருந்தது. வடகிழக்கிலே நாங்கள் உத்தியோக பூர்வ எதிர்க்கட்சி. வடகிழக்குக்கு வெளியே 12 ஆசனங்கள் மொத்தம் 29 மாகாண சபை ஆசனங்களோடு இருந்த எங்களை சேர்த்துக்கொண்டு ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தை வீட்டுக்கனுப்ப வேண்டும் என்பதே இந்த கூட்டணியின் நோக்காக இருந்தது.

இந்த நேரத்தில் நினையாப்புறமாக சிலவிடயங்கள் நடந்தேறின. எங்களுக்கும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்குமான தேர்தல் உடன்படிக்கையில் ஒரு முரண்பாடு வந்துவிட்டது. அந்த முரண்பாட்டின் பின்னர் இரவோடு இரவாக பிரேமதாச எங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடாத்தினார். அதன்பயனாகத்தான் சகோதரர் ரவூப் செயின் சொன்ன அந்த சாதனைகளில் ஓன்று நிறைவேறுகிறது. இந்த நாட்டின் அரசியல் சாசனமே மாற்றி அமைக்கப்படுகிறது. ஆறில் ஐந்து பெரும்பான்மை இந்த பாராளுமன்றம் கலைப்பதற்கு ஒரு நாள் இருக்கத்தக்கதாக 15 வது சரத்து திருத்தப்பட்டு இந்த நாட்டில் முஸ்லிம்களுக்கு மாத்திரமல்லாமல் சகல சிறிய கட்சிகளுக்கும், பல சிறுபான்மை இயக்கங்களுக்கும் ஒரு அரசியல் அடையாளத்தை தனித்துவத்தோடு அடையக்கூடிய வாய்ப்பை ஆக்கித்தந்த பெருமைக்குரிய பாரிய சாதனையை செய்தது எங்களுடைய தலைவருடைய சாணக்கியம் என்றால் அது மிகையாகாது.

ஒரு நள்ளிரவிலே அனைத்தும் நடந்து முடிந்து அடுத்தநாள் பாராளுமன்றத்திலே அரசியல் சாசனத்திற்கு திருத்தமும் பிரேரிக்கப்பட்டு அது இரவோடிரவாக வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டது.

அடுத்து வருகிற தேர்தலில் இவ்வாறான உபாயத்தை கையாள வேண்டிவருமோ தெரியாது. 1988 ஜனாதிபதி தேர்தலில் எந்த வேட்பாளருக்கும் ஆதரவளிப்பதாக நாங்கள் சொல்லவில்லை. ஸ்ரீமாவோ பண்டார நாயக்க எங்களுக்கு துரோகம் இழைத்து விட்டார். அவரைத்தவிர யாருக்கும் வாக்களிக்கலாம். இதனைத்தான் நாங்கள் சொன்னோம். ஏனென்றால் அந்த நேரத்தில் ஐக்கிய தேசிய கட்சிக்கு வாக்களிக்க சொல்ல முடியாத நிலை. இதனை பிரேமதாசாவுக்கும் தெளிவு படுத்தினோம் அவர் அதனை ஏற்றுக்கொண்டார் இதன் விளைவாகதான் பிரேமதாச ஜனாதிபதியானார். இது எதிர்காலத்தில் எங்களுக்கு இன்னொரு உபாயம்.இவ்வாறான மாற்றுவழிகளை எங்களுக்கு சொல்லித்தந்த பெருந்தலைவராகதான் அவரை என்றும் நாங்கள் நினைவு கூறுகிறோம்.

தேர்தல்காலங்களிலே தலைவரின் சுறுசுறுப்பை அருகிலிருந்து பார்த்தவர்கள் நாங்கள் இங்கு நிறையப்பேர் இருக்கிறோம். ஜனாதிபதி தேர்தல் என்றால் எப்படி அடுத்த பாராளுமன்ற தேர்தலில் ஆசனங்களை கூட்டிக்கொள்ள முடியும். அதனோடு சமுகம் சார்ந்த விடயங்களை எப்படி சாதித்துக்கொள்வது. என்பதை வடிவமைப்பதில் தொடர்ந்தும் ஊணின்றி, உறக்கமின்றி உழைக்கின்ற அந்த தலைமைதான இழந்து இழந்து பெருமூச்சு விட்டுக்கொண்டிருக்கிறது. ஒரு சமூகத்தின் அரசியல் தலைமை என்றால் என்ன? அதனுடைய ஆளுமையின் அம்சங்கள் என்ன? என்பதற்கான அடையாளச்சின்னம் அவர். அந்த அடையாளச்சின்னத்தைத்தான் நாங்கள் இன்று நினைவுகூர்ந்து கொண்டிருக்கிறோம்.அந்த தலைவனைப்போல ஒருத்தலைவனை இனிமேல் நாங்கள் பார்க்க முடியாது. தன்னுடைய சொந்த குடும்ப உறுப்பினராகவே கட்சியின் உறுப்பினர்களைப்பார்த்த ஒரு தலைவனைத்தான் நாம் இழந்துள்ளோம்.

பெரும் விருட்சமொன்றை எமக்கு அவர் தந்துவிட்டு சென்றுள்ளார். அதை தரிப்பதற்கு எத்தனை கோடாரிக்காம்புகள் வந்தாலும் அதனை தாங்கிநிற்கின்ற திராணியை போராளிகளுக்கு அவர் தந்திருக்கிறார். சமூகம் பாரிய சவால்களை சந்தித்தபோது நாங்கள் இணைந்து செயற்பட்டோம். அண்மையில் இடம்பெற்ற பயங்கரவாத செயற்பாடு எங்கிருந்து உருவெடுத்தது என்று யாருக்கும் தெரிந்திருக்கவில்லை.இவர்களை யார் இயங்கினார்கள்?அது செய்திருக்கின்ற விபரீதம் இன்று எங்களை மட்டும் பாதிக்க வில்லை தமிழகத்தை பாதித்திருக்கிறது, கேரளத்தை பாதித்திருக்கிறது,மாலை தீவையும் அது பாதிக்கலாம் என்ற ஒரு அச்சத்தை உருவாக்கி எந்த சக்தி இதில் குளிர்காய நினைக்கிறது என்பதைப்பற்றி நாம் ஆழமாக சிந்திக்க வேண்டும்.  இந்த இந்து சமுத்திரத்தின் தென்பிராந்தியத்திலிருக்கின்ற முஸ்லிம் சமூகம் தன்னை ஒன்றுபடுத்தி ஒன்றாக நின்று இந்த சவால்களுக்கு முகம் கொடுக்க வேண்டும். எங்களை கூறுபோட்டு எங்களுக்குள்ளே குழப்பத்தை ஏற்படுத்த நினைக்கின்ற சக்திகளின் மூலவித்தை நாங்கள் அடையாளம் காண வேண்டும் ஜனநாயக ரீதியாக அதெற்கெதிரான பலமான ஒரு அணியாக நாம் இருக்க வேண்டும். தலைவர் இருந்திருந்தால் இன்று அதைத்தான் செய்திருப்பார். அந்த தலைவனைப்போல அடுத்த கட்ட அரசியலை பொறுப்புணர்வோடு நாங்கள் கையாள்வதற்கு எல்லாம் வல்ல இறைவன் அருள்பாலிக்க வேண்டும் என்று பிரார்த்தித்தவனாக சகல தரப்புக்களையும் இணைத்த பலமான ஒரு இயக்கமாக இந்த இயக்கத்தை புடம் போடுவதற்கு புறப்படுவோம் வாருங்கள்.

Read more...

ஞாயிறு, 15 செப்டம்பர், 2019

கட்டுரை




ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபக தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம் .அஷ்ரப் அவர்களின் 19 வது நினைவு தினத்தை முன்னிட்டு இந்த கட்டுரை வெளியிடப்படுகின்றது

தனித்துவ கட்சிமீதான அஷ்ரபின் தணியாத தாகம்

- நாச்சியாதீவு பர்வீன்.

இலங்கை அரசியல் வரலாற்றில் தவிர்க்க முடியாத அரசியல் கூறாக முஸ்லிம் அரசியலை கொள்ள முடியும்.  பெரும் தேசியக்கட்சிகளின் ஆதரவுத்தளத்தில் நின்று செயற்பட்டு வந்த முஸ்லிம் சமூகம் ஒருகட்டத்தில் இன்னொரு சிறுபான்மை சமூகமான தமிழ் சமூகத்தின் அரசியல் பங்காளிகளாக செயற்பட்டு வந்தன. ஆனால் பெருந்தேசிய கட்சிகள் முஸ்லிம் சமூகத்தை ஏமாற்றியது போலவே தமிழர்கள் சார்ந்த கட்சியும் முஸ்லிம் சமூகத்தை ஏமாற்றியது. இதனால் விரக்தியுற்ற முஸ்லிம் தலைமைகளின் மாற்றுத்தீர்மானம்தான் முஸ்லிம்களுக்கான தனிக்கட்சியான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எனும் தனித்துவமான கட்சி உருவாகியது.
ஆரம்பகாலத்தில் சமூதாய சிற்பிகளாக  செயற்பட்ட அறிஞர் சித்திலெப்பை, ரி.பி.ஜாயா, சேர்.ராசிக் பரீட் , டாக்டர் பதியுதீன் மஹ்மூத் போன்றவர்கள் தம்மாலான சமூக பணிகளை மேற்கொண்டாலும் அது முஸ்லிம் சமூகத்தின் விடுதலைக்கான பரிபூரண தளத்தை உண்டுபண்ணவில்லை. அவர்களது காலத்தில் தனியான முஸ்லிம் கட்சி ஒன்றின் தேவைப்பாடு தொடர்பில் சிந்தனைகள் எழுவதற்கு ஆணித்தரமான காரணங்கள் எதுவும் இருக்கவில்லை ஆனால் பிற்காலத்தில் அது உணரப்பட்டது. அவர்களின் பின்னர் பாராளுமன்றத்தினை பிரதிநிதிப்படுத்திய முஸ்லிம்களினால் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு அடைவுகளை பெற்றுக்கொள்ள முடியவில்லை. எனவே முஸ்லிம் சமூகத்தினை ஒன்றிணைத்து பலமான அரசியல் சக்தியாக அதனை மாற்றவேண்டிய தேவை உணரப்பட்டது. அந்த தேவையை நிறைவேற்றும் சக்தியாக அஷ்ரப் தன்னை உருவாக்கிக் கொண்டார்.

1980 ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தோற்றமானது வெறுமனே எழுந்தகமாக எடுக்கப்பட்ட முடிவு கிடையாது. அஷ்ரப் எனும் அரசியல் மேதையின் தூர சிந்தனையின் வெளிப்பாடாகவே அது அமைந்தது. அரசியல் ரீதியாக புறக்கணிக்கப்பட்ட ஒரு சமூகத்தின் தனித்துவமான குரலாக இருக்கவேண்டும் என்ற பேரவாவின் அடையாளமாகவே இந்த கட்சி தோற்றம் பெற்றது.       எல்லா நிலையிலும் புறக்கணிக்கப்பட்ட ஒரு சமூகமாக முஸ்லிம் சமூகம் இருப்பதை கண்டு மர்ஹூம் அஷ்ரப் மனம் வெதும்பினார். முஸ்லிம் சமூகத்தின் வாக்குகளை பெற்று பாராளுமன்றம் சென்றவர்கள் தாம் சார்ந்த கட்சிகளின் கட்டுப்பாட்டில் இருந்தனர் . அதனால் அவர்களால் தமது சமூகம் தொடர்பில் வாய்திறக்க முடியாத நிலை இருந்தது. அத்தோடு  குறுகிய அரசியல் காரணங்களை அடிப்படையாக வைத்து அவ்வப்போது  உருவாகிய பல முஸ்லிம் கட்சிகள் அடையாளமற்று காணாமல் போயின. இந்நிலையில் பலத்த போராட்டங்களுக்கு மத்தியில் உருவாக்கப்பட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தற்போது நீண்ட நெடுமரமாக கிளைவிட்டு செழித்து வளர்ந்துள்ளமை அஷ்ரப் அவர்களின் தூய எண்ணத்தின் அடையாளமே. 

இலங்கை அரசியல் வரலாற்றை  எழுதுகின்ற எவரும் இனிமேல் அஷ்ரபுக்கு முந்திய அரசியல் வரலாறு, அஷ்ரபுக்கு பின்னரான வரலாறு என்று பிரித்தே எழுத வேண்டும். அந்தளவுக்கு இலங்கை அரசியல் வரலாற்றில் மர்ஹூம் அஷ்ரப்  அவர்களின் காத்திரமான பங்களிப்பும்,சடுதியான முடிவுகளும் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தின. ஒரு காலத்தில் முஸ்லிம் சமூகத்தின் வாக்குகள் வெறும் செல்லாக்காசுகளாகவே பயன்படுத்தப்பட்டன. ஆனால் அஷ்ரப் அவர்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை நிறுவி அதன் மூலம் கிடைக்கப்பெற்ற அரசியல் அதிகாரத்தின் பயனாக  ஆட்சியை மாற்றுகின்ற அல்லது தீர்மானிக்கின்ற சக்தியாக  முஸ்லிம் சமூகத்தின் அரசியல் சக்தியாக நிறுவிக்காட்டினார்.

சட்டக்கல்லூரி மாணவனாக இருந்த காலத்திலேயே முஸ்லிம் சமூகம் தொடர்பில் கரிசனையும்,அக்கறையும் மர்ஹூம் அஷ்ரப் அவர்களிடத்தில் மேலோங்கி காணப்பட்டது. அதன்விளைவாக வெவ்வேறான அரசியல் கட்சிகளுடன் அவர் பயணித்தார். ஆனால் முஸ்லிம் சமூகத்தின்  உரிமைகளை பெற்றுக்கொள்வதிலும், அதன் அபிலாஷைகளை நிறைவேற்றிக்கொள்வதிலும் ஏற்பட்ட தேக்க நிலையே அஷ்ரப் அவர்களின் தனித்துவமான அரசியல் கட்சிக்கு வழிவகுத்தது எனலாம். பெருந்தேசிய கட்சிகளின் நிழலில் பயணித்த முஸ்லிம் அரசியல் தளம் அஷ்ரபின் முஸ்லிம் காங்கிரஸ் உருவாக்கத்தின் பின்னர் அதனை சுற்றி நகரத்தொடங்கியது. இதனால் பெரும் தேசிய கட்சிகளில் அங்கம் வகித்த முஸ்லிம் பிரதிநிதிகள் அஷ்ரப்பை வெகுவாக எதிர்த்தார்கள். அதற்க்கான காரணம் அஷ்ரப் அவர்களின் தனிக்கட்சி தமது வாக்கு வங்கிகளில் பலத்த பின்னடைவை உண்டு பண்ணும் என்பதனை அவர்கள் உணர்ந்தார்கள்.
முஸ்லிம் சமூகத்தின் வாக்குப்பலத்தின் பெறுமானத்தை மூலதனமாக்கி பேரம் பேசுகின்ற சக்தியாக அஷ்ரப் உருவெடுத்திருந்தார். அஷ்ரபின் இந்த தார்மீக போராட்டத்தில் மக்கள் கவர்ந்திழுக்கப்பட்டார்கள்.இதனால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கான மவுசு நாளுக்குநாள் அதிகரித்தது. 1985 ஆம் ஆண்டு தலைவர் அஷ்ரப் கட்சிப்பணிகளில் சற்று ஓய்வுடன் இருந்தார் ஆனால் 1986ஆம் ஆண்டு பாஷா விலாவில் நடைபெற்ற கட்சியின் 6வது தேசிய மாநாட்டில் போராளிகள் மற்றும் புத்திஜீவிகளின் ஆதரவினை கண்டு மீண்டும் புத்துணர்ச்சி பெற்று கட்சியை மேலும் விரிவாக்கம் செய்யும் வேலையில் ஈடுபட்டார்.

முஸ்லிம் காங்கிரஸ் சில முக்கிய கோரிக்கைகளை முன்னிறுத்தி செயற்பட்டது. அதிலும் அபிவிருத்தி அரசியலை விடவும் சமூகத்தின் உரிமையை பெற்றுக்கொடுப்பதிலும் அதனை பாதுகாப்பதிலும் உறுதியாக நின்றது. இலங்கை முஸ்லிம்கள் தனித்துவமிக்க ஒருதேசிய இனமாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பதே அதன் தாரக மந்திரமாக இருந்தது. சிங்களவர்களையும்  , தமிழர்களை போல முஸ்லிம்களும் ஒரு தேசிய இனமாக அங்கீகரிப்பதோடு இனரீதியாக அதிகாரபரவலாக்கத்தில் முஸ்லிம்களுக்கான தனியலகுக்கோரிக்கை கருத்தில் கொள்ளப்படவேண்டும் என்பதில் உறுதியாக அஷ்ரப் இருந்தார். அத்தோடு முஸ்லிம்களின் தனித்துவமான சட்டமான ஷரிஆ சட்டத்தை மாற்றும் முயற்சியை அரசு கைவிட வேண்டும் என்று உறுதியாக குரல் எழுப்பியது முஸ்லிம் காங்கிரஸ். அஷ்ரபின் உரிமை சார்ந்த கோஷங்கள் முஸ்லிம்கள் மத்தியில் பிரபல்யம் பெற்றன.
1987 ஆம் ஆண்டு பிரதேச சபைத்தேர்தல் நியமனப்பத்திரம் தாக்கல் செய்கின்ற போது முஸ்லிம் காங்கிரஸ் ஒரு அரசியல் கட்சியாக அங்கீகரிக்கப்பட்டிருக்கவில்லை. இருந்தும் மு.கா சுயேற்சையாக கிழக்கில் களமிறங்கியது. அந்த தேர்தலை பகிஷ்கரிக்குமாறு விடுதலைப்புலிகள் அனைத்து தரப்பினருக்கும் அச்சுறுத்தல் விடுத்தனர் அன்றைய ஆளும்தரப்பே இந்த அச்சுறுத்தலினால் ஆடிப்போயிருந்த போது தலைவர் அஷ்ரப் அவர்கள் தமது ஆதரவாளர்களுடன் கொழும்புக்கு சென்று அந்த தேர்தலுக்கு முகம் கொடுக்க தயாரானார். இதில் சில முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்கள் உயிருக்கு பயந்து தாமாகவே விலகிக்கொண்டார்கள். ஆனால் எவ்விதமான உயிராபத்தையும் எதிர்கொள்ள குறிப்பிட்ட சிலர் பெருந்தலைவர் அஷ்ரபுக்கு துணையாக இருந்தனர். மர்ஹூம் அஷ்ரப் அவர்களின் இந்த துணிச்சலான முடிவு தேசியத்தில் பிரசித்தமாக பேசப்பட்டது. எல்லா ஊடகங்களும் தலைவர் அஷ்ரபை மையப்படுத்தியே செய்திகளை வெளியிட்டன. அன்றைய தினத்திலிருந்து முஸ்லிம்கள் மத்தியில் புகழ் மிக்க ஒரு தலைமையாக அஷ்ரப் அவர்கள் நோக்கப்பட்டார்கள்.

1988 ஆம் ஆண்டு முஸ்லிம் காங்கிரஸ் என்ற கட்சி தேர்தல் ஆணையாளரினால் அங்கீகரிக்கப்பட்டு முழுநேர அரசியல் கட்சியாக பரிணமித்தது. 1988 ஆம் ஆண்டு மாகாண சபைத்தேர்தலில் வடகிழக்கு வெளியே பிரசித்தம் பெற்ற ஒரு முஸ்லிம் கட்சியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் விளங்கியது. அவ்வாறே இணைந்த வடகிழக்கு மாகாண சபைத்தேர்தலில் 17 ஆசனங்களை முஸ்லிம் காங்கிரஸ் பெற்று இலங்கை அரசியல் வரலாற்றில் தவிர்க்க முடியாத ஒரு கட்சியாக தன்னை நிரூபித்தது. 1989 ஆம் ஆண்டு அஷ்ரப் அவர்கள் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று முஸ்லிம் காங்கிரசின் பாராளுமன்ற பிரதிநியாக தெரிவு செய்யப்பட்டார். தனது பாராளுமன்ற கன்னியுரையில் முஸ்லிம் சமூகத்திற்கான தனித்துவமான ஒரு கட்சியின் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். 12.5 % விகிதமாக இருந்த பிரதிநிதித்துவ அரசியல் விதியை சிறிய கட்சிகளுக்கு இலகுவில் பிரதிநிதித்துவத்தை பெற்றுக்கொள்ளும் வகையில்  5% வெட்டுப்புள்ளியாக மாற்றியது அஷ்ரபின் அரசியல் அதிகாரத்தின் மூலம் பெற்றுக்கொள்ளப்பட்ட பெரும் வெற்றியாகும். இதன் பிரதிபலனை தற்போது சிறிய கட்சிகள் பலவும் அனுபவிக்கின்றன. மக்கள் விடுதலை முன்னணி  உட்பட என்பது வரலாற்றுப்பதிவாகும்.

மிகச்சிறந்த இலக்கிய வாதியாகவும், எழுத்தாளராகவும்,மேடைப்பேச்சாளராகவும் இருந்த பெருந்தலைவர் அஷ்ரப் தமது கொள்கைகளை மக்கள் மயப்படுத்தும் ஊடகமாக இவற்றை பயன்படுத்தினார். இதனால் இலகுவில் அஷ்ரபின் கொள்கைகள் பாமர மக்களையும் சென்றடைந்தது எனலாம். கட்சிக்கான எழுச்சிப்பாடல்கள்,வீரியமிக்க புரட்சிக்கவிதைகள், உணர்வுபூர்வமான மேடைப்பேச்சுக்கள் என மக்களை கவருகின்ற சகல யுக்திகளும் தலைவர் அஷ்ரப்பிடம் இருந்தன. இதனால் அன்று கோலோச்சிய முஸ்லிம் இலக்கிய வாதிகள் அஷ்ரபை நேசித்தார்கள். அவரின் புகழ் பாடினார்கள் அவரின் அறப்போராட்டத்தில் தங்களையும் இணைத்து இந்த கட்சியின் பங்காளிகளாக தம்மை மாற்றிக்கொண்டார்கள்.

1994 ஆம் ஆண்டு அஷ்ரப் மீண்டும் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டு முழு அமைச்சராகின்றார். மு.காவின் வெற்றிக்காக கிடைத்த தேசியப்பட்டியலை  இன்றைய முஸ்லிம் காங்கிரஸ் தலைமை ரவூப் ஹக்கீமுக்கு வழங்கி அவர் குழுக்களின் பிரதித்தலைவராக வருவதற்கு வழிசமைத்து கொடுக்கிறார் மர்ஹூம் அஷ்ரப். ரவூப் ஹக்கீம் என்ற இந்த ஆளுமையின் வீரியத்தை அன்றே அஷ்ரப் அவர்கள் அறிந்தமையும் தனக்கு பின்னால் ஒரு தலைமையை அடையாளப்படுத்தியுமே ரவூப் ஹக்கீமுக்கு தேசியப்பட்டியல் வழங்கப்பட்டதாக அஷ்ரப் அவர்களின் மரணத்தின் பின்னர் பேசப்பட்டது. அது உண்மையும் கூட. 1989 ஆம் ஆண்டு தனிமரமாக பாராளுமன்றம் சென்ற அஷ்ரப் 1994 ஆம் ஆண்டில் ஒன்றுக்கும் மேற்பட்ட ஆசனங்களுடன் பாராளுமன்றத்தினுள் நுழைந்தார்.
உரிமை கோஷங்களை மூலதனமாக வைத்து இயங்கிவந்த அஷ்ரப் அவர்களின் அரசியல் வியூகம் 1994 ஆம் ஆண்டின் பின்னர் உரிமை சார்ந்த விடயங்களோடு அபிவிருத்தியின் பக்கமும் தனது பார்வையை செலுத்தியது. ஏராளமான தொழில் வாய்ப்புக்கள், அபிவிருத்தி திட்டங்கள், சமூகம் தொடர்பிலான பல கோரிக்கைகள் என்று தனக்கு கிடைத்த வாய்ப்பினை மிகவும் சமயோசிதமாக பயன்படுத்தி பாரிய அபிவிருத்தியை மேற்கொண்டார். இதனால் பெரும்பான்மை அரசியல் சக்திகள் அஷ்ரபிமீது பொறாமை கொண்டனர். அஷ்ரபை  வீழ்த்த பல்வேறு சூழ்ச்சிகளை மேற்கொண்டனர். அவர்களின் சூழ்ச்சிகள் எதுவும் பழிக்கவில்லை மாறாக அஷ்ரப் தொட்டதெல்லாம் பொன்னாக மாறியது அவரை விமர்சித்தவர்கள், அவர்மீது பொறாமை கொண்டு வீண்பழி சுமத்தியவர்கள்,அவரை ஒரு இனவாதியாக சித்தரித்தவர்கள் எல்லோரும் ஒரு கட்டத்தில் ஓய்ந்து போயினர் அஷ்ரப் தனது பணியில் காட்டாறு போல வேகமாக முன்னேறிக்கொண்டே போனார். அஷ்ரபின் சேவைகளில் மிக முக்கியமானவையாக கருதக்கூடிய பல சேவைகள் உள்ளன அதில் ஒலுவில் பல்கலைக்கழகம், ஒலுவில் துறைமுகம், கல்முனை அஷ்ரப் மருத்துவமனை என்பன சிலவாகும்.

அஷ்ரப் அவர்களின் காலத்தில் துறைமுக அதிகார சபையில் பல்லாயிரம் முஸ்லிம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்தும் இங்கு குறிப்பிட வேண்டிய முக்கிய விடயமாகும். அஷ்ரபின் ஏறுமுகத்தில் உள்ளூர வெந்து கொண்டிருந்த சிலரின் சூழ்ச்சியால் 2000 ஆம் ஆண்டு திட்டமிடப்பட்டு பெருந்தலைவர் அஷ்ரப் அவர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். இந்த கொலையின் சூத்திரதாரிகள் இதுவரை அடையாளம் காணப்படாமல் மர்மமாகவே இருப்பது குறிப்பிடத்தக்கது.  அஷ்ரபின் இழப்பு முஸ்லிம் சமூகத்தை மீண்டும் அனாதைகளாக ஆக்கியது எனலாம். அஷ்ரபின் வளர்ச்சியில் வெறுப்புற்றிருந்த பலர் அஷ்ரப் அவர்களின் மரணத்தின் பின்னர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அழிந்து போய்விடும் என்று கனவு கண்டார்கள். பிற்காலத்தில் அவர்கள் கண்டது கனவு மட்டுமே என்பது நிரூபணமாகியது.

அஷ்ரப் விட்ட இடம்.

2000 ஆம் ஆண்டு அஷ்ரப் அவர்களின் அகால மரணத்தின் பின்னர் கட்சியின் தலைமைப்பொறுப்பானது தலைவர் ரவூப் ஹக்கீமிடம் வருகிறது. முஸ்லிம் காங்கிரசை மர்ஹூம் அஷ்ரப் விட்ட இடத்தலிருந்து தூக்கி சுமக்கின்ற தார்மீக பொறுப்பனாது அவரின் தோள்களில் சுமத்தப்படுகின்றன. தேர்தல் காலம் கிழக்கில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்தும் கிழக்குக்கு வெளியே குறிப்பாக கண்டியில் மரச்சின்னத்திலும் மு.கா களமிறங்கியது. அந்த தேர்தல் முஸ்லிம் காங்கிரசுக்கு சவால் மிக்க தேர்தலாக அமைந்தது. அதிலும் தலைவர் ரவூப் ஹக்கீமை தோற்கடித்து முஸ்லிம் காங்கிரஸ் என்ற கட்சியை அழித்துவிட ஆளும் கட்சியே திட்டம் தீட்டியது. இதற்காக உட்கட்சி பூசலை உருவாக்கியது, கட்சிக்குள் இருந்தே பிளவுகளையும், முரண்பாடுகளையும் தோற்றுவித்து பிரித்தாளும் தந்திரத்தை மேற்கொண்டது. இன்னும் சொல்லப்போனால் பெருந்தலைவர் அஷ்ரப் அவர்களை பலவீனப்படுத்த எடுத்த முயற்சிகளைவிடவும் பலமடங்கு அழுத்தங்கள் தலைவர் ரவூப் ஹக்கீமை பலவீனப்படுத்தவும்,தோல்வியடைய செய்யவும் முன்னெடுக்கப்பட்டன.
முஸ்லிம்களின் சுமார் 10 உயிர்களை அந்த தேர்தல் காவுகொண்டது. இருந்தும் அஷ்ரபின் மரணம் தந்த மக்கள் அலை அந்த தேர்தலில் முஸ்லிம் காங்கிரசுக்கு முன்னரைவிடவும் அதிகமான ஆசனங்களை பெற்றுக்கொடுத்தன. தலைவர் ரவூப் ஹக்கீம் கண்டி மாவட்டத்தில் மரச்சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். மர்ஹூம் அஷ்ரப் அவர்களுக்கு வழங்கப்பட்ட அதே கௌரவமும்,அந்தஸ்த்தும் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு கட்சி தொண்டர்களால் வழங்கப்பட்டது. கட்சியின் ஆதரவாளர்களை, தொண்டர்களை மர்ஹூம் அஷ்ரப் அவர்கள் போராட்ட வீரர்களாக விழித்தார். எனவே அவர்களை போராளிகளே என்று வாஞ்சையுடன் விழித்தார். பின்னர் தலைவர் ரவூப் ஹக்கீமும் அதே முறைமையை பின்பற்றினார்.

தலைவர்  ரவூப் ஹக்கீம் இந்த கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்று இப்போது 19 வருடங்கள். இந்த கால எல்லையில் முஸ்லிம்களின் கட்சியான இந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசை பலவீனப்படுத்த பலர் முயற்சிகள் மேற்கொண்டுதான் வருகின்றார்கள். அவற்றை சாதுரியமாக எதிர்த்து கட்சியை வீழ்ச்சிப்பாதையிலிருந்து மீட்டெடுத்து இயங்கிக்கொண்டிருக்கிறார் இன்றைய தலைவர் அமைச்சர் ஹக்கீம். பெருந்தலைவரின் காலத்தை விடவும் பெரும் சவால்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிர்பந்தம் இன்றைய தலைவருக்கு தொடர்ந்தும் ஏற்பட்டு வருகிறது. அவ்வப்போது கிளர்ந்தெழுகின்ற இனவாத பேய்களிடமிருந்து முஸ்லிம் சமூகத்தை சேதாரமில்லாமல் பாதுகாக்குகின்ற அரும்பணி அவருக்கு எழுந்துள்ளது. அந்தப்பணியில் அவர் காத்திரமாக இயங்கி வருவது தனது பணியை அவர் புறக்கணிக்கவில்லை என்பதனை தெளிவு படுத்துகின்றது.

மர்ஹூம் அஷ்ரப் மரணித்து சுமார் 19 வருடங்கள் ஆனபோதும் மக்கள் மனதைவிட்டு நீங்காத உன்னத தலைவனாக இன்னும் ஆராதிக்கப்படுவது அவரின் நேர்மையான மக்கள் பணிக்கு கிடைத்த அங்கீகாரமாகவே கொள்ள வேண்டும். இலங்கை முஸ்லிம்களின் உரிமைக்குரலாக அஷ்ரப் வகுத்த அதே பாதையில் முஸ்லிம் காங்கிரஸ் இன்னுமின்னும் வீரியத்துடன் எழுச்சியடைய வேண்டும். வீணான முரண்பாடுகள்,தலைமைத்துவ ஆசைகள்,காட்டிக்கொடுப்புக்கள் என்று கொஞ்சமும் குறைவில்லாமல் தற்போதும் கட்சிக்குள் எழுந்தாலும் இந்த கட்சியின் மெய்யான போராளிகள் அவற்றை முறியடித்து இந்தக்கட்சியை பாதுகாப்பதில் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு பக்கபலமாக இருக்கின்றனர்.

       19 வது நினைவு தினம்

மர்ஹூம் அஷ்ரப் அவர்களின் 19வது நினைவு தின நிகழ்வு குருநாகல், சியம்பலாகஸ்கொடுவயில்  இம்முறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் குருநாகல் மாவட்ட அமைப்பாளரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான ரிஸ்வி ஜவஹர்ஷா அவர்களினதும் அந்த மாவட்டத்து மத்திய குழுவினரினதும் வேண்டுகோளுக்கு இணங்க இந்த நிகழ்வு தீர்மானிக்கப்பட்டுள்ளது. சட்டத்தரணி ரிஸ்வி ஜவஹர்ஷா மூன்று முறைகள் வடமேல் மாகாண சபையில் முஸ்லிம் காங்கிரசின் பிரதிநிதியாக சபையை அலங்கரித்தவர். குருநாகல் மாவட்டத்து முஸ்லிம்களின் பாராளுமன்ற கனவை நிறைவேற்ற இருக்கின்ற ஒரேயொரு தெரிவாக கணிக்கப்படுபவர். சுமார் ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட குருநாகல் மாவட்ட முஸ்லிம்களின் எதிர்பார்ப்பாக அண்மைக்காலமாக மிளிரும் ரிஸ்வி ஜவஹர்ஷா கோடிக்கணக்கான ரூபாய்களுக்கான அபிவிருத்தியையும, ஏராளமான தொழில் வாய்ப்புகளையும் அந்த மாவட்டத்திற்கு பெற்றுக்கொடுத்தவர்.

அண்மையில் நடத்தப்பட்ட கூலிப்படை குண்டுத்தாக்குதலின் விளைவாக குருநாகல் மாவட்டத்தில் அதிகமான முஸ்லிம் இளைஞர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட போது அவர்களின் விடுதலைக்காக களத்தில் நின்று செயற்பட்டவர். வெறுமனே குருநாகல் மாவட்டத்தில் கைதானவர்களை மட்டுமே கருத்திற்கொள்ளாமல் நாடளாவிய ரீதியில் கைது செய்யப்பட்டவர்களின் விடுதலைக்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமையகமான தாருஸ்ஸலாமில் அமைக்கப்பட்ட செயலணியில் முக்கிய செயற்பாட்டாளராக செயற்பட்டவர். எனவே வடக்கு,கிழக்கை தாண்டி செறிவான முஸ்லிம் வாக்குகளையும், முஸ்லிம் காங்கிரசின் ஆதரவு தளத்தையும் கொண்ட குருநாகல் மாவட்டம் மறைந்த பெருந்தலைவரின் நினைவு தினத்தை ஞாபகப்படுத்த சிறந்த தெரிவுதான். எல்லாம் வல்ல இறைவன் மறைந்த தலைவர் அஷ்ரப் அவர்களுக்கு உயர்தரமான சொர்க்கத்தை வழங்குவதோடு, இன்றைய தலைவர் ரவூப் ஹக்கீமுக்கும் நீண்ட ஆயுளை வழங்கி சமூகப்பணியில் இன்னும் தீவிரமாக இயங்க உதவி புரிவானாக.

Read more...

புதன், 21 ஆகஸ்ட், 2019

கட்டுரை /அரசியல்

முஸ்லிம் தலைமைகளின் பதவி துறப்பும் – ஏற்பும்  சாதித்தவை என்ன ?.

-நாச்சியாதீவு பர்வீன் -



இலங்கை அரசியலில் எதிர்பாராத சடுதியான மாற்றங்கள் அவ்வப்போது நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. இவ்வாறான சடுதியான நிகழ்வுகளின் மூலம் ஆட்சியில் பாரிய மாற்றங்கள் ஏற்படவில்லையானாலும் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையில் அவை தாக்கம் செலுத்துகின்ற பிரதான காரணியாக அமைந்து விடுகின்றது. இதற்க்கு நல்ல உதாரணங்களாக அண்மைய சில நிகழ்வுகளை அடையாளமிட்டு கூற முடியும். இதில் குறிப்பாக அண்மையில் ஸஹ்ரான் என்ற முஸ்லிம் பெயர்தாங்கி தீவிரவாதியினால் மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான,வெறுக்கத்தக்க தற்கொலை குண்டு தாக்குதலும் அமைந்தது எனலாம் .

இந்த குண்டு தாக்குதலின் பின்னர் ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தையும் குற்றவாளிக்கூண்டில் ஏற்றிவைத்து விசாரணைக்குற்படுத்தி, குறித்த செயலோடு சம்பந்தப்பட்டவர்கள் என்று அடையாளப்படுத்த பேரினவாத சக்திகள் கடும் முயற்சி மேற்கொண்டது. ஆனால் அவர்களின் சூழ்ச்சி அவர்கள் நினைத்த மாதிரி நூறுவிகிதம் பலனளிக்கவில்லை. அதற்க்கு பிரதானமான காரணம் இலங்கையில் முஸ்லிம்களுக்கு இருக்கின்ற வலுவான அரசியல் தலைமைத்துவங்களாகும். அதிலும் குறிப்பாக ஆளும் தரப்பில் அதிகாரமிக்க அமைச்சு பொறுப்புக்களில் முஸ்லிம் தலைமைகள் அமர்ந்திருப்பதும், இந்த நல்லாட்சியை அமைப்பதில் மிக முக்கிய பங்காளிகளாக முஸ்லிம் அரசியல் கட்சிகள் முன்னின்று செயற்பட்டமையும், அரசுக்கெதிரான சூழ்ச்சிகளின் போது அவற்றை நேருக்குநேர் எதிர்கொண்டு ஜனநாயகத்தை காப்பதில் முஸ்லிம் தலைமைகளின் செயற்திறனும் முஸ்லிம் சமூகத்தை பேரினவாத சக்திகளிடமிருந்து காப்பதற்கு உதவியது எனலாம்.

ஆனால் முஸ்லிம் தலைமைகளின் சக்திக்கு அப்பாலும் சில வன்முறைகளும், அடாவடித்தனங்களும் திட்டமிட்ட அடிப்படையில் நடந்தேறின. முஸ்லிம் சமூகத்திற்கெதிரான வன்முறைகளின் பின்னணியில் வலுவான அரசியல் காரணங்கள் இருப்பதும், அதனை திட்டமிட்டவர்கள் தொடர்பிலான தகவல்களும் தற்போது வெளிவந்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த அரசாங்கத்தை முற்றுமுழுதாக நம்பி செயற்பட்டு வந்த முஸ்லிம் சமூகத்திற்கு அரசாங்கம் எவ்விதமான நன்றிக்கடனையும் செலுத்தவில்லை என்கின்ற விமர்சனம் பரவலாக முஸ்லிம் சமூகத்தினர் மத்தியில் உலவி வருகின்றது. பாதுகாப்பு தரப்பினரின் முன்னிலையிலேயே சகல வன்முறைகளும் நிகழ்த்தப்பட்டன என்கின்ற உண்மையை அரசாங்கம் ஏற்றுக்கொண்டாலும், அரசின் கையாலாகாத தனத்தை இது மிகத்தெளிவாக சுட்டிக்காட்டுவதோடு, இந்த அரசின் பங்காளிகளாக முஸ்லிம் தலைமைகளுக்கு இது சமூகத்தின் மத்தியில் பலத்த எதிர்வினைகளை ஏற்படுத்தியது.

இவ்வாறான ஒரு சந்தர்ப்பத்தில்தான் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் அமைச்சர்கள் அனைவரும் கூட்டாக தமது அமைச்சுப்பொறுப்புக்களை துறந்து அரசுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார்கள். ஜூன் 3 ஆம் திகதி முஸ்லிம் அமைச்சர்கள் தமது பதவிகளை இராஜினாமா செய்தபோது அதற்கான காரணத்தை அவர்கள் ஊடகங்களுக்கு தெளிவாக கூறியிருந்தார்கள். இந்த ஊடக சந்திப்பானது அன்றைய தினமே சகல தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பப்பட்டு  மறுநாள் பத்திரிகைகளில்  தலைப்பு செய்தியாக வெளியாகியது.

அமைச்சுப்பொறுப்புகளை துறந்த முஸ்லிம் அமைச்சர்கள் பிரதானமாக பின்வரும் காரணங்களை முன்வத்தே தமது அமைச்சுப்பொறுப்புக்களை துறப்பதாக பகிரங்கமாக அறிவித்தார்கள்.

 A1-முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக வன்முறைகளை கட்டவிழ்த்து விடும் திட்டமிட்ட செயற்பாடுகள் உடனடியாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படவேண்டும் .  

A2-  பயங்கரவாத செயற்பாடுகளுக்கு  முஸ்லிம் அரசியல்வாதிகள் எவராவது துணை போயிருந்தால்  அவர்கள்  எவ்வாறான உயர்பதவிகளை வகித்தாலும் அவர்களுக்கு எதிரான விசாரணைகளை துரிதப்படுத்தலும் சுயாதீனமாகஅவற்றை  மேற்கொள்ள வழிவிடலும்

A3- பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புள்ளவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில்  கைதாகியுள்ள முஸ்லிம் இளைஞர்களின் விசாரணைகளை துரிதப்படுத்தி அப்பாவிகளை விடுதலை செய்தல்.  

 A4-நாட்டில் இனநல்லிணக்கத்தையும், சமாதானத்தையும் மீண்டும் நிறுவுதல் ,



மேற்சொன்ன காரணங்கள் தவிர்த்து வேறு எந்த கோரிக்கைகளையும் அவர்கள் அந்தநேரத்தில் முன்வைக்கவில்லை என்பது நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். முஸ்லிம் அமைச்சர்களின் கூட்டு இராஜினாவின் பின்னர் அதன் பிரதிபலனாக சில விடயங்கள் சடுதியாக அமுலுக்கு வந்தன



B1-நாடு தழுவிய ரீதியில் முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்து விட திட்டமிடப்பட்டிருந்த வன்முறைகள், உடனடியாக கட்டுக்குள் வந்ததன. 

B2- அரச குற்றப்புலனாய்வு துறையினரும் , பாதுகாப்பு தரப்பினரும் விசாரணைகளை துரிதப்படுத்தி முடித்து , முஸ்லிம் அமைச்சர்களோ அல்லது பதவி துறந்த முஸ்லிம் ஆளுநர்களோ குறித்த தீவிரவாத செயலோடு சம்பந்தப்பட்டிருக்கவில்லை  என்கின்ற முடிவினை தமது இறுதி அறிக்கையில் பகிரங்கப்படுத்தினர் . . 

B3-குண்டு வெடிப்பு சம்பவத்துடன்  சம்பந்தப்படாமல் புனையப்பட்ட,சில்லறை  குற்றசாட்டுகளுக்காக  கைது செய்யப்பட்ட பெரும்பாலானவர்வகள் விடுதலை செய்யப்பட்டு ( Dr ஷாபி உட்பட)  சிலர் பிணையிலும்  விடப்பட்டுள்ளனர். 

B 4- பெரும்பான்மை சமூகத்திற்கும் முஸ்லிம் சமூகத்திற்கும் இடையிலான நல்லிணக்கம் மெல்ல உருவாகிவருகின்ற ஆரோக்கியமான சூழல் உருவாகிவருகிறது.

இந்த சடுதியான முன்னேற்றகரமான மாற்றம் அதிஸ்டவசத்தால் நிகழ்ந்தது என்று வாதாடமுடியாது. ஏனென்றால் முஸ்லிம் சமூகத்தை சுற்றி பின்னப்பட்டிருந்த இனவாத வலையில் இருந்து இந்த சமூகத்தை சேதாரமில்லாமல் காக்குகின்ற அரும்பணியை முஸ்லிம் தலைமைகள் செவ்வனே செய்துள்ளன. இதன் அர்த்தம் முஸ்லிம் சமூகத்தின் ஒட்டுமொத்த பிரச்சினைகளும் தீர்ந்து விட்டன என்பதல்ல மாறாக கடுமையான நெருக்குவாரங்களில் இருந்து முஸ்லிம் சமூகம் தற்காலிகமாக மீற்கப்பட்டுள்ளது என்பதே ஆகும்.


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமையகத்தில் இயங்கும் “ காரணமின்றி கைதுசெய்யப்பட்டவர்களை விடுவிக்கும் செயலணிக்கு “ கிடைத்த முறைப்பாடுகள் அனைத்தும் சட்டமா அதிபர் திணைக்களத்தூடாக கையாளப்பட்டு , 90% மானோர் பிணையில் அல்லது முற்றாக விடுதலை செய்யப்பட்டுள்ளனர் . தீவிரவாதிகளுடன் தொடர்பை பேணியவர்கள் அல்லது ஏதாவது சட்டவிரோத செயற்பாடுகளுடன் சம்பந்தப்பட்டவர்கள் என 18 கோப்புகளே எஞ்சியுள்ளன. நீண்ட விசாரணைகளுக்கு ஆளாகவேண்டியுள்ளது . இவர்களின் விடுதலைக்கு மு.கா செயளணியினர் தொடர்ந்தும் முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றனர்.

இராஜினாமாவின்போது முன்வைக்கப்பட்ட அனைத்து கோரிக்கைகளுக்கும் சாதகமான முடிவுகள் எட்டப்பட்டதுடன் அதற்கு மேலதிகமாக -

  • அப்பாவிகளின் கைதுகள் முற்றாக நிறுத்தப்பட்டு உறுதிசெய்யப்பட்ட ஆதாரங்களுடன் மட்டுமே தற்போது கைதுகள் இடம்பெறுகின்றன.  
  • முஸ்லிம்களின் வீடுகள் , வியாபார நிலையங்கள் பள்ளிவாயல்கள் போன்ற இடங்களில் நடாத்தப்பட்ட திடீர் சோதனைகள் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன  
  • குண்டுவெடிப்பினை தொடர்ந்து பூதாகாரமாக்கப்பட்ட ஹபாயா பிரச்சினை புதியதொரு சுற்றுநிருபத்தின் மூலமாக தீர்வுக்கு வந்தது. 
  • முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளை சர்வதேசத்தின் கவனத்திற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்  தலைமை சர்வதேச ஊடகங்களின் பல நேர்காணல்களுக்கூடாக கொண்டு சென்றதால்   சர்வதேசமும்  தமது வலுவான கண்டனத்தை இலங்கை அரசுக்கு தெரிவித்தது .


எத்தகைய காரணங்களை முன்வைத்து முஸ்லிம் அமைச்சர்கள் தமது பதவிகளை துறந்தார்களோ அவற்றில் கணிசமான அடைவை அரசின் துணையுடன்  எட்டியுள்ளதுடன் முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளவிருந்த  பாரிய பிரச்சினைகளிலிருந்து  விடுபட்டு ஓரளவு சுதந்திரமாக நடமாடும் சூழல் தற்போது  உருவாகியுள்ளது. இந்நிலையில் கூட்டு இராஜினாவின் போது முன்வைக்கப்படாத கோரிக்கைகளை காரணம் காட்டி அமைச்சுக்களை பொறுப்பெடுக்காமல் காலம் தாழ்த்துவது

  • பெரும்பான்மை சமூகத்தின் மத்தியில் “ பேரம் பேசல் “ போன்ற பிழையான மனப்பதிவுகளை ஏற்படுத்தலாம் ,
  • அஸ்கிரிய, மல்வத்து உயர்பீடங்களின் மகாநாயக்க தேரர்களின் வேண்டுகோள்களை தொடர்ந்தும்  புறந்தள்ளுவது அவர்களை அகௌரவப்படுத்துவதாக அமையலாம். 
  • பெரும்பான்மை சமூகத்திற்கும் முஸ்லிம் சமூகத்திற்கும் இடையிலான நல்லிணக்கம் மெல்ல உருவாகிவருகின்ற ஆரோக்கியமான சூழலில் பாதிப்புக்களை உண்டாக்கலாம் . 

இவற்றுக்கு புறம்பாக பேசப்படும் பிரச்சினைகளான 

  • கல்முனை உள்ளூராட்சி எல்லைப்பிரச்சினை , 
  • முஸ்லிம் விவாக -விவாகரத்து சட்டம்
  • மத்ரஸாக்களின் பாடத்திட்டம் தொடர்பிலான முரண்பாடு , 
  • புர்கா-நிகாப் தடை விவகாரம் 

போன்றவை உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முன்னரே அவ்வப்போது பேசப்படுவதும் பின்னர் கிடப்பில் போடப்படுவதுமாக இருந்த பிரச்சினைகளாகும். அத்தோடு மேற்சொன்ன எந்தப்பிரச்சினைக்கும் தீர்வினை வேண்டி இந்த இராஜினாமா இடம்பெறவில்லை என்பதனை நாம் மனங்கொள்ளவேண்டும். 

முஸ்லிம் சமூகத்தின் உரிமைக்குரலாக செயற்படும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் குறித்த காலப்பகுதியில் பல்வேறு சமூக செயற்பாடுகளில் தனித்து நின்று செயற்பட்டது. குருநாகல், புத்தளம்,கம்பஹா மாவட்டங்களில் சிங்கள காடையர்களினால் திட்டமிட்டு நாடாத்தப்பட்ட வன்முறைகளினால்  பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரடியாக விஜயம் செய்து அப்பகுதிகளில் சேதமாக்கப்பட்ட பள்ளிவாசல்கள், வியாபார ஸ்தலங்கள், வாகனங்கள், அசையும் அசையா சொத்துக்கள் தொடர்பிலான சேதவிபரத்தையும், இழப்பு தொடர்பிலான மதிப்பீட்டு அறிக்கையையும் துல்லியமாக பெற்று அரசுக்கு வழங்கியது. அதன் பிரதிபலனாக அண்மையில் சேதமாக்கப்பட்ட பள்ளிவாசல்களுக்கான இழப்பீடுகள் அரசினால் வழங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.   

புர்கா -நிகாபுக்கு மாத்திரம் தடை என்றிருந்த போதும் அபாய அணிவதும் குற்றமாக சித்தரிக்கப்பட்ட போது முஸ்லிம் பெண்கள் மானசீகமாக பாதிக்கப்பட்டார்கள். இதற்காக முஸ்லிம் காங்கிரஸ்  அதன் தலைமை ரவூப் ஹக்கீமின் ஆலோசனைக்கு இணங்க ஒரு செயலணியை  அமைத்து பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு நேரடியாக சென்று இந்த பிரச்சினைக்கு தீர்வினை பெற்றுக்கொடுப்பதில் முன்னின்று செயற்பட்டது. 

அத்தோடு புனையப்பட்ட கைதுகளில் இருந்து முஸ்லிம் இளைஞர்களை காப்பாற்றும் முகமாக அவர்களுக்கான ஆலோசனைகளை வழங்கி வீணான கைத்துகளில் இருந்து பலரை காப்பாற்ற ஆலோசனைகளை அவ்வப்போது வழங்கியது. மேற்சொன்ன செயற்பாடுகள் அனைத்தையும் ஒருகட்சியாக இருந்து முஸ்லிம் காங்கிரஸ் மாத்திரமே செய்தது என்பது யாவரும் அறிந்த உண்மை.
இவைகள் அந்தக்கட்சியின் கடமையும் கூட. இவைகள் கூட்டு இராஜினாவுக்கு முன்னரே இருந்து செய்யப்பட்டு வந்த செயற்பாடுகளாகும்.

அத்தோடு கூட்டாக இராஜினாமா செய்தவர்களுள் ஐக்கிய தேசியக்கட்சி முஸ்லிம் பிரதிநிதிகள் ஏற்கனவே அமைச்சுக்களை பொறுப்பேற்றுள்ள நிலையில் , மற்றைய கட்சியான மக்கள் காங்கிரஸ் பிரதிநிதிகள் அனைவரும் அமைச்சுக்களை பொறுப்பேற்க தீர்மானித்துள்ள சூழலில் முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதிகள் மீண்டும் அமைச்சுப்பொறுப்புக்களை ஏற்பதா , இல்லையா என்கிற கருத்து முரண்பாடு 29.07.2019 அன்று  பேசப்பட்டபோது  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் உயர்பீடத்தின் முடிவின் பிரகாரம் முஸ்லிம் காங்கிரசை பிரதிநிதித்துவப்படுத்தும் எவரும் பதவி ஏற்பதில்லை என்கின்ற முடிவில்  தலைவர்  ரவூப் ஹக்கீம்  உறுதியாக இருந்தார். ஆனால்  இராஜினாமாவுக்காக முன்வைத்த காரணங்களில் கணிசமான அடைவினை எட்டியிருப்பதனாலும், தேர்தல்கள் நெருங்கி வருகிற சூழலில், அமைச்சரவையில் வளைந்து கொடுக்காத  முஸ்லிம் தலைமைத்துவத்தின் அவசியத்தை முன்னிறுத்தியும்   தலைவர் ஹக்கீமை அமைச்சுப்பொறுப்பை ஏற்குமாறு அன்றையதினம் இது விடயமாகவும் விவாக விவாகரத்து சட்டத்திருத்தம் குறித்தும் நடைபெற்ற கலந்துரையாடல்களில் பங்குபற்றிய   மு .காவின் உயர்பீட செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் மற்றும்  உயர்பீடத்தில் பொறுப்பான பதவிகளை வகிப்பவர்களும் பாராளுமன்ற பிரதிநிதிகளுமான   பைசல் காசிம், அலி ஸாஹிர் மௌலானா, எம் .எஸ் .தௌபீக், ஏ .எல் .நசீர், எம்.ஐ .மன்சூர்  ஆகியோர்  வலியுறுத்தினர். 

ஆகவே மிக முக்கியமான இக் காலக்கட்டத்தில்  அமைச்சரவை தீர்மானங்கள் முஸ்லிம் சமூகத்திற்கு பாதகமாக அமைந்து விடக்கூடாது என்ற நோக்கில் தலைவர் ஹக்கீம் மாத்திரம் அமைச்சுப்பொறுப்பை ஏற்பதென்றும்  ஏனைய மு.கா சார்பிலான முன்னாள் அமைச்சர்கள் முஸ்லிம் சமூகத்தின் குறித்த பிரச்சினைகளில் நியாயமான அடைவுகளை எட்டும்வரை எவ்வித  அமைச்சுப்பதவிகளையும்  ஏற்காது தொடர்ந்தும் அரசுக்கு அழுத்தம் கொடுப்பதென்றும் கூட்டாக முடிவெடுத்தனர் . 

அமைச்சுப்பொறுப்புக்களை மீளப் பாரமெடுத்ததற்கு அடுத்த தினம்  ( 30.07.2019 )காலையில் கூடிய அமைச்சரவையில் சமர்பிக்கப்பட்டிருந்த “நிகாப் – புர்கா” தடைக்கான அமைசரவைப் பத்திரம் , அமைச்சர் , தலைவர் ஹக்கீம் அவர்களின் பலத்த கண்டனத்தினால் பிற்போடப்பட்டமை தலைவர் ஹக்கீம் மீளவும் அமைச்சுகளைப் பொறுப்பேற்றதன் உடனடிப் பிரதிபலனாகும் .  அத்தோடு மாகாண சபைதேர்தலை புதிய தொகுவாரியான முறையில் நடத்துவதற்கான முஸ்தீபுகள் நடப்பதாக அரசல்புரசலாக கதை வெளியாகியது, முஸ்லிம் அமைச்சர்கள் அமைச்சரவையில் இல்லாத நிலையில் அந்த பிரேரணை கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டால் 41 ஆக இருந்த முஸ்லிம் மாகாண சபை உறுப்பினர்களின் எண்ணிக்கையானது வெறும் 13 க்கு மட்டுப்படுத்தப்படும் அபாயம் நிகழும். எனவே முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதித்துவம் அமைச்சரவையில் மிக முக்கியமாகும்.

அமைச்சர்களான ஹலீம் -கபீர் ஹாஷிம் ஆகியோர் அமைச்சரவையில் இருக்கின்றார்கள் தானே இந்தவிடயத்தை அவர்கள் பார்க்க மாட்டார்களா? என்ற கேள்வி சில புத்திசாலிகளுக்கு எழலாம். உண்மையில் அவர்களும் இந்த கூட்டு இராஜினாமாவின் பங்காளிகளாக இணைந்து கொண்டமையே சகல அரசியல் தரப்புக்களையும், பௌத்த உயர்பீடங்களையும் ஆழமாக சித்திக்க வைக்க ஏதுவாக அமைந்தது. அவர்களின் இராஜினாமாவானது நன்றிக்கும்,பாராட்டுக்கும் உரியது என்பதில் இருவேறு கருத்துக்கள் இருக்க முடியாது. ஆனால் அவர்கள் இருவரும் பெரும் தேசிய கட்சி ஒன்றின் பிரதிநிதிகள் அவர்கள் விரும்பியோ விரும்பாமலோ அந்த கட்சியின் கொள்கைக்கும்,கோட்பாட்டுக்கு, கட்டளைகளுக்கும் செவிசாய்க்க வேண்டிய நிர்பந்தம் உள்ளது அதனால் அவர்களினால் சுயமாக முடிவெடுக்க முடியாது. அவர்களின் கட்சி தலைமையின் விருப்பத்திற்கு அமையவே பெரும்பாலான விடயங்களில் அவர்கள் முடிவெடுப்பார்கள். ஆனால் ரவூப் ஹக்கீம் போன்ற முஸ்லிம் தலைமைகளுக்கு அவ்வாறான இக்கட்டான நிலை கிடையாது சமூகம் பாதிக்கப்படும் சந்தர்ப்பங்களில் அரசுக்கெதிராக முடிவெடுக்கின்ற திராணியும், அதிகாரமும் நூறுவிகிதம் உண்டு. அது பலதடவைகள் நிரூபிக்கப்பட்டும் உள்ளன,

எனவே முஸ்லிம் தலைமைகளின் பதவி துறப்பு எவ்வாறு கொண்டாடப்பட்டதோ ! அவ்வாறே அவர்களின் பதவியேற்பும் சமூக நலனுக்காகவே என்கின்ற உண்மையை முஸ்லிம் சமூகம் ஏற்கத்தான் வேண்டும். ஒரு சிக்கலான அரசியல் சுழிக்குள் நாம் சிக்கியிருக்கிறோம் அதிலிருந்து நம்மை மீட்டெடுக்கும் சக்தியை இறைவன் நமது முஸ்லிம் தலைவர்களுக்கு வழங்குவானாக என்று பிரார்த்திப்போம்.

நன்றி : விடிவெள்ளி (16/08/2019)

Read more...

  © © All Rights Reserved by நாச்சியாதீவு பர்வீன் @ 2009 BT

Back to TOP  by