பழமில்லா மரம்
முன்னரெல்லாம்
முற்றிப்பழுத்த
பழம் இருந்த காலத்தில்
மரத்தை சுற்றி
மாம்பழத்தான் குருவியும்
பச்சைக்கிளியும்
மஞ்சள் நிரக்குருவிகளும்
இன்னும் பழந்திண்ணி
பறவைகள் பலவும்
மரத்திலே முகாமிட்டு
மந்திர ஆலோசனை நடத்தும்
ஒவ்வொரு கிளையையும்
தம் வசமாக்கி
தந்திரமாய் பழம் உண்ணும்
அரசியல் நுணுக்கம்
அந்தப் பறவைகளுக்கு
தெரிந்திருந்தது
மரத்தை குதூக்கலாமாக்கும்
பறவைகளின் கும்மாளத்தில்
அந்தப் பிரதேசமே
கலகலத்துப் போகும்
காலம் நகர
மரம்
மரத்துப்போனது
இலை இழந்து
கிளை இழந்து
கலை இழந்து போனது மரம்
கூடு கட்டி
குடும்பம் நடத்திய
குருவிக்கூட்டம்
அருவிக்கரை நோக்கி
இடம்பெயர்ந்து சென்றன
பழமில்லாத காரணத்தால்
பலமிழந்து போனது மரம்
மரத்தை நோக்கிய
பறவைகளின் வரவு
இல்லாமல் போனது
ஒரு பொழுதில்
யாருமற்ற அனாதையாக
தனிமையில்
இருந்தது அந்த மரம்
இன்னொரு
பழ மரம் தேடிப் பறந்த
பறவைகள்
இந்த மரத்தை மறந்து போயின
மரம் நினைத்துக்கொண்டது
இந்தப்பறவைகளும்
மனிதர்கள் போலவே
ஆகிப்போய் விட்டது என்று
நாச்சியாதீவு பர்வீன்
2013/11/20
0 கருத்துகள்:
கருத்துரையிடுக