Related Posts with Thumbnails

திங்கள், 22 நவம்பர், 2010

நிஜங்களின் வலி


துயர் பாடும்
ஒரு கவிதையின்
இறுதிவரியாக
நீ என்னுள் வீற்றிருக்கின்றாய்

சோகங்களை மட்டுமே
அள்ளிச் சொரிந்து விட்டு
கடந்து செல்லும்
ஒரு சூறாவளியின்
உருவத்தில் ஒட்டியிருக்கிறது
உனது அருவமான உருவம்.

நிஜங்களின் வலிபற்றி
நான் ஒன்றும் சொல்லி
புரிய வைக்கத்தேவை இல்லை

ஒரு பல்லியைப் போல
சுவரில் ஒட்டிக்கொண்டு
வாழும் வாழ்க்கையில்
நமதான ஜீவிதம் கடந்துவிட்டது

மெல்ல அசைபோடும்
அந்த நாட்களை
எனது எல்லாக் காலையும்
மெல்லிதாய் நினைக்கும்

வாடகைக்காய் வாழ்வது
வாடிக்கையாகி விட்ட
இந்தப் பொழுதுகள்
சுமைகளாலும் சில நேரங்களில்
சுவாரசியம் அடைகிறது.

மீள் நிரப்பபடாத
ஒரு இடைவேளிதனிலே
சமாந்திரமாக நகரும்
இந்த வாழ்வின் மிச்சப் பகுதியை
சில இரவுகளும்
சில கண்ணீர்த்துளிகளும்
நிரப்பி விடுகின்றன.

நாச்சியாதீவு பர்வீன்.
2010 . 10 .20 .

  © © All Rights Reserved by நாச்சியாதீவு பர்வீன் @ 2009 BT

Back to TOP  by